5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மூடல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 2, 2022

5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மூடல்!

5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகள் மூடல்!




கொரோனா பரவல் எதிரொலியாக ஐந்து மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்துள்ளது
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்து வருவதற்கிடையே, தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை, ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஒமைக்ரான் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு வாய்ப்பாக இருக்கலாம் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டு வருவதால், பூஸ்டர் டோஸ் போடவும், 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பணிகள் நாளை முதல் தொடங்கவுள்ளன.

அதேசமயம், தொற்று விகிதங்கள் அதிகரிப்பதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க மத்திய சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.

அந்த வகையில், கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக ஹரியாணா மாநிலத்தின் 5 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹரியாணாவில் குருகிராம், ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்ச்குலா மற்றும் சோனிபட் ஆகிய மாவட்டங்களில் இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் ஜனவரி 12ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட மாவட்டங்களில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர், மல்ட்டிபிளக்ஸ்கள் மூடப்பட வேண்டும். வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகள் ஆகியவை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்களில் பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள், வர்த்த கண்காட்சி உள்ளிட்டவைகளுக்கு அனுமதி கிடையாது. பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட வேண்டும். அவைகள் செயல்பட அனுமதி கிடையாது.

அத்தியாவசிய தேவைகளைக் கருத்தில்கொண்டு அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று பார்கள் மற்றும் உணவகங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இறப்பு நிகழ்வில் 50 பேரும், திருமண நிகழ்ச்சியில் 100 பேரும் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி. 100 பேருக்கு மேல் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் முன் அனுமதி வாங்க வேண்டும்.

முகக்கவசம் அணிவதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணியவில்லை என்றால் எந்த சேவைகளுக்கும் அனுமதி இல்லை. கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட பொது இடங்களில் அனுமதி இல்லை என்றும் ஹரியாணா சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad