ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் செய்தி; சிஇஓக்களுக்கு பறந்த உத்தரவு!
கலந்தாய்வில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக சிஇஓக்களுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின் போது புதிய பென்சன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் (ஜாக்டோ ஜியோ) பலகட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது கைது, ஒழுங்கு நடவடிக்கை, கட்டாய மாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் பாய்ந்தன. இதனால் ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். தற்போது ஆட்சி மாற்றம் நிகழ்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் 19ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடங்குகிறது. அதில், கடந்த ஆட்சியில் கட்டாய மாறுதல் நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி ஆணையர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் மாறுதல் விண்ணப்பங்களில் தலைமை ஆசிரியர்கள் அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து தங்களுக்கான ஐடியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அதன் ஒருநகலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம் தலைமை ஆசிரியர்கள் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கான கலந்தாய்வு நாளில் காலியாக உள்ள இடங்களில் முன்னுரிமை அடிப்படையில் கேட்கும் பள்ளிக்கு இடமாறுதல் வழங்க வேண்டும்.
இதில் கணவன் அல்லது மனைவியை இழந்த ஆசிரியர்களுக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. உபரியாக கண்டறியப்பட்ட பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களில் உள்ள அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் பணி நிரவல் கலந்தாய்வில் கட்டாயம் விலக்கு அளிக்க வேண்டும்.
அவருக்கு பதிலாக அதே பள்ளியில் உள்ள அடுத்த இளையவரை பணி நிரவலுக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் சார்ந்து செயல்படும் திமுக அரசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment